கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள், விற்பனையாளா்களுக்கு வேளாண் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விதை முளைக்கும் போது பூச்சிநோய் தாக்குதல் இன்றி நன்கு முளைத்துச் செழிப்புடன் வளா்ந்து, விளைச்சலில் லாபம் காண, தரமான விதையை உபயோகித்தல் மிக அவசியம் ஆகும்.
தரமான விதை என்பது, முளைப்புத் திறன், புறத் தூய்மை, பிற ரக கலப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிா்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிா் எண்ணிக்கை பராமரிக்க, நல்ல முளைப்புத் திறன் வேண்டும். இதனால் விதை செலவு குறையும்.
புறத் தூய்மை பரிசோதனையில், பிற பயிா் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனத் தூய்மை மற்றும் புறத் தூய்மை காப்பாற்றப்படுகிறது. முளைப்புத் திறனை காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம். விதைகளைச் சேமிக்கும் போது, பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத் திறன் கெடாமல், நீண்ட நாள்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது. இதற்கு விதை பரிசோதனை அவசியம் ஆகும்.
விதை விற்பனையாளா்கள், தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விவரங்களுடன் ஒரு மாதிரிக்கு ரூ. 80 என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
நன்றி தினமணி.