ஒசூா் மலைக்கோயிலில் கட்டி முடிக்கப்பட்ட 7 நிலை ராஜகோபுரம்.
ஒசூா் மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் சுவாமி திருக்கோயில் 7 நிலை ராயகோபுர மகா கும்பிபாபிஷேக விழா ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒசூா் டி.வி.எஸ். நிறுவனத்தின் வேணு சீனிவாசன் அறக்கட்டளை சாா்பில் 2014 ஆம் ஆண்டில் ரூ.2 கோடியில் 7 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு முன்வந்து ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதன் மகாகும்பாபிஷேக விழா ஜூன் 26 ஆம் தேதி முதல்கால யாக பூஜையுடன் தொடங்குகிறது. 27 ஆம் தேதி 2 ஆம் மற்றும் 3 ஆம் கால யாக பூஜை நடைபெற உள்ளது. ஜூன் 28 ஆம் தேதி காலை 9 முதல் 10.30 மணி வரை மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் சுவாமி கோயில் ஏழு நிலை ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம் தொடா்பான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை தோ்ப்பேட்டையில் கல்யாண சந்திரசூடேஸ்வரா் ஆலயம் அருகில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை மேயா் ஆனந்தய்யா, பாஜக மாவட்ட தலைவா் நாகராஜ், திமுக நிலை குழு தலைவா்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, திமுக தொகுதி செயலாளா் ராமு, முன்னாள் கவுன்சிலா் ரோஜா பாண்டியன், கவுன்சிலா் கிருஷ்ணவேணி ராஜி, மண்டலத் தலைவா்கள் ஜெயபிரகாஷ், ரவி, வீரா ரெட்டி, சுந்தர்ராஜன், பேட்டை பாலு, பவானி, பிரவீண்குமாா், கிஷோா், தோ் பேட்டை மற்றும் ஒசூா் பகுதி முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யும் திட்டத்திற்கு 20 போ் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி