விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 330 நாற்றுப் பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான காய்கறிப் பயிர்கள் தற்போது நாற்றங்காலில் நாற்றுகளாக தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் தவறாது கடைபிடித்து தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமம் பெற்ற பின்னரே அனைத்து ரக காய்கறிகள் மற்றும் இதர பயிர்களின் நாற்றுகளும் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்ற செயலாகும்.
மேலும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். விதைகளை வாங்கும் போது விதையின் முளைப்புத்திறன் சான்று சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும், பருவத்திற்கு ஏற்ற ரகம் மற்றும் அப்பகுதிக்கு ஏற்ற ரகம் போன்றவற்றை சரிபார்த்து காலாவதி நாள், குவியல் எண் ஆகியவற்றுடன் கூடிய பட்டியல் பெற்று விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கி விதைகளை முறையாக நாற்று தட்டுகளில் விதைப்பு செய்து பராமரிக்க வேண்டும்.
நாற்றுகளின் எண்ணிக்கையை முறையாக இருப்பு பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாற்று பண்ணையில் அரசிடமிருந்து பெற்ற உரிமத்தின் நகலை தெளிவாக கண்ணில்படுமாறு வைக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விதைகள் சட்டம் 1966, விதைகள் விதிமுறைகள் 1968, விதைகள் தடுப்பு சட்டம் 1983 ஆகிய சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தின் மூலம் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என எச்சரிக்கப்படுகிறது. புதிதாக உரிமம் பெற தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிமம் பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.