கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
1883 வாக்குச்சாவடிகள்
இது குறித்து அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.1.2024ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலின்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், பர்கூர் தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், வேப்பனஹள்ளி தொகுதியில் 312 வாக்குச்சாவடிகளும், ஓசூர் தொகுதியில் 381 வாக்குச்சாவடிகளும், தளி தொகுதியில் 303 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1883 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன.
இதில் ஓசூர் மற்றும் தளி சட்டமனற் தொகுதியில் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட 3 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதியதாக 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், தளி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் மேல்முறையீடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வருகிற 28ம் தேதிக்குள் அளிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)வேடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி, தனி தாசில்தார் (தேர்தல்) ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்பி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்