கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆழியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய் அமைக்கும் திட்டத்தை, மாற்றுப் பாதையில் அமைக்க கோரி விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் 250க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் சுப்பையா, செயலாளர் முனிராஜ், பொருளாளர் முரளி ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். இதில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஸ்டாலின் பாபு, மத்திய கமிட்டி உறுப்பினர் பிரபாகர் ரெட்டி ஆகியோர் பேசினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது: சூளகிரி அடுத்த ஆழியாளம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கொண்டு செல்ல, 26 கி.மீ., தொலைவிற்கு கால்வாய் அமைக்கும் திட்டத்தை தமிழக அறிவித்தது. இதற்காக சுமார், 200 ஏக்கர் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்த அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது. இதனால், 1,500-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கால்வாய் திட்ட பணியை செயல்படுத்த அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர். விவசாய நிலங்களை கையகப்படுத்தி அமைக்கப்படும் இந்த கால்வாயால் இம்மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக இத்திட்டத்தை செயல்படுத்த தேன்கனிக்கோட்டை வட்டத்தில் கொப்பரை வரையுள்ள தென்பெண்ணை ஆற்றிலிருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கலாம். அவ்வாறு செய்தால், ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து ராமாபுரம், நாயகானபள்ளி, பீர்ஜேப்பள்ளி, தியானதுர்க்கம், லட்சுமிபுரம் ஏரி, நாகமங்கலம் ஏரி வழியாக தூள்செட்டி ஏரிக்கு மாற்றுப்பாதையில், குறைந்த தூரத்தில் கால்வாய் அமையும், இங்குள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படாது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
இக்கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, இத்திட்டம் குறித்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை அரசுக்கு தெரிவிக்கப்படும். இப்பிரச்சனை குறித்து விரைவில் அமைதி குழு பேச்சு வார்த்தை நடத்தும் என கலெக்டர் தெரிவித்தார்.