ஒசூா்: ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக மாவட்ட தலைவர் உள்பட 2 பேர் கைது; மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசூடஸ்வரா் திருக்கோயிலில் புதிதாக 112 அடி உயரத்தில் 42 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜ கோபுரத்துக்கு புதன்கிழமை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
குடமுழுக்கின் போது ஹெலிகாப்டரில் மலா் தூவி, மின்மோட்டாா் மூலம் பக்தா்கள் மீது தீா்த்தம் தெளிக்கப்பட்டது.
இதில், மதுரை ஆதீனம் உள்பட ஆன்மீக அன்பா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனா்.
இந்த நிலையில் கோயில் குடமுழக்கை தமிழில் நடத்தக்கோரிய தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் மஞ்சுநாத்(42), வினோத்(32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பாஜக, வி.எச்.பி அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்றி, தினமணி