கிருஷ்ணகிரி அருகே பூர்வீக கிராமத்தில் உள்ள பெற்றோரின் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமம் நடிகர் ரஜினிகாந்த்தின் மூதாதையர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்ந்த பூர்வீக கிராமமாகும். அத்துடன் அவரது உறவினர்கள் பலரும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பெங்களூரில் வசித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் திரைத்துறைக்கு சென்ற பிறகு சென்னை சென்றார்.
தற்போதும் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ், சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து உறவினர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், தனது பெற்றோரின் பூர்வீக கிராமமான நாச்சிகுப்பத்தில் பெற்றோர் ரானோஜிராவ் & ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கரில் நிலத்தை வாங்கினார். மேலும் நினைவகத்திற்கு அப்போது அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. ஆனாலும் ரஜினி ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ரஜினி பிறந்த நாள் நிகழ்ச்சி, நடிகர் ரஜினியின் படம் வெளியீட்டின் போது உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை அங்கு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நாச்சிகுப்பத்தில் உள்ள நிலத்தை ரஜினியின் அண்ணன் நேரடியாக பராமரித்து வருகிறார். மேலும் அங்கு ரானோஜிராவ் & ராம்பாய் சிலைகளுடன் நினைவகமும் கட்டப்பட்டது. அந்த பகுதி கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜெயிலர் படம் வெளியான பிறகு ரஜினிகாந்த் வட மாநிலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பினார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற அவர், தான் படித்த பள்ளி, தான் பணிபுரிந்த போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்த்தார்.
நேற்று பெங்களூரில் இருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பத்தில் தனது பெற்றோரின் பூர்வீக ஊருக்கு முதல் முறையாக வந்தார். பகல் 11.35 மணி அளவில் வந்த அவர், நினைவகத்தில் உள்ள பெற்றோர் ரானோஜிராவ்& – ராம்பாய் சிலைகளுக்கும், சாமி சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நினைவகத்தை சுற்றி பார்த்த அவர், தனது உறவினர்கள், மற்றும் அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்த ரஜினிகாந்த், பின்னர் கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ரஜினி வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் பலரும் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் சென்று விட்டதை அறிந்து ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து ரஜினி உடன் வந்த அவரது அண்ணன் சத்யநாராயணராவ் கூறியதாவது: நீண்ட நாட்களாக பெற்றோரின் ஊரான நாச்சிகுப்பம் வர வேண்டும் என ரஜினி திட்டமிட்டிருந்தார். தற்போது பெங்களூர் வந்தவர், நாச்சிகுப்பம் வந்து பெற்றோர் நினைவகம் சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார். மீண்டும் வருவார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரஜினி ரசிகர் மன்ற ஓசூர் மாநகர செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)