கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் அணைக்கு, 374 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 921 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகமாகும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி நெடுங்கல்லில், 65 மி.மீ., மழை பதிவாகியது. அதே போல், போச்சம்பள்ளி, 32.10, பாரூர், 29, பாம்பாறு அணை, 28, ஊத்தங்கரை, 25.40, கே.ஆர்.பி., அணை, 24.20, பெனுகொண்டாபுரம், 5.20 என மொத்தம், 208.90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.