பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள், மா, வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள் இப்பயிர்களை தாக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்திட வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்படுமு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டினை வெகுவாக குறைக்கலாம்.
மேற்குறிப்பிட் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை கடைபிடிக்காமல் தேவைக்கு அதிகமாக பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவமன் மூலம் நாம் உண்ணும் உணவுகளிலும் மற்றும் கால்நடைத் தீவணங்களிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவு நிர்ணயிக்கப்பட்ட நஞ்சு அளவைவிட அதிகமாக இருக்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பிற்காலங்களில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த முடியாமல் மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்திட வேண்டும். பூச்சி மருந்துகள் குறித்த தகவல்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.